Publish Date: Wed, 02 Sep 2020 (18:44 IST)
Updated Date: Wed, 02 Sep 2020 (18:48 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று முதல் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக அரசு மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்தை அனுமதி அளித்ததை அடுத்து சென்னையில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது
நாளை முதல் ரயில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு டிக்கெட் மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்