Publish Date: Wed, 02 Sep 2020 (14:31 IST)
Updated Date: Wed, 02 Sep 2020 (14:33 IST)
தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை மாநிலத்திற்குள் மேற்கொள்ளும் வகையில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பேருந்து, ரயில் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் அரசு பேருந்துகளை குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மேலும் தளர்வுகளை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 7 முதல் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திற்குள்ளாக பயணிகள் ரயில்களை இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேசமயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.