Publish Date: Wed, 16 Mar 2022 (15:17 IST)
Updated Date: Wed, 16 Mar 2022 (15:18 IST)
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (17.03.2022) முதல் காலை 58.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ சேவை:
மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் நெரிசல்மிகு நேரங்களில் காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 8 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ இரயில் சேவை:
மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.