Publish Date: Mon, 03 Jun 2019 (09:08 IST)
Updated Date: Mon, 03 Jun 2019 (10:49 IST)
திருநெல்வேலி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை துன்புறுத்தி கொலை செய்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவருக்கு 4 வயதில் குட்டிராஜ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த சில வருடங்களாக கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மகேஸ்வரிக்கு கருப்பசாமி என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கருப்பசாமி ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்நிலையில் மகேஸ்வரியோடு இவர் கள்ள காதலில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார் கருப்பசாமி. ஒருநாள் இவர் சென்றபோது மகேஸ்வரி கடைக்கு சென்றுள்ளார். அங்கே குட்டிராஜ் மட்டும் விளையாடி கொண்டிருந்திருக்கிறான். மகேஸ்வரி வந்து பார்த்தபோது சிறுவன் குட்டிராஜ் இறந்து கிடந்தான். மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டான் என கருப்பசாமி சொல்லியிருக்கிறார். இருவரும் இதை வெளியே சொல்லாமல் குழந்தை இயற்கையாக இறந்து விட்டது போல் வெளியே சொல்லி உடலை தகனம் செய்துவிட்டார்கள்.
இதையடுத்து சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாக சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீஸார் மகேஸ்வரி மற்றும் கருப்பசாமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் ஒரு திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது. கருப்பசாமி ஒரு வித்தியாசமான மனநோய் உள்ளவர் என்றும் சிலசமயம் கோபம் அதிகமானால் தான் என்ன செய்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் செயல்படுவார் என்றும் தெரியவந்தது. அப்படிப்பட்ட புத்தி பேதலித்த நிலையில்தான் சிறுவன் குட்டிராஜை அவர் அடித்து, உதைத்து துன்புறுத்தி கொன்றிருக்கிறார் என தெரியவந்தது. பிறகு மகேஸ்வரி, கருப்பசாமி இருவரையும் கைது செய்த போலீஸார் சிறையிலடைத்தனர்.