தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்னும் சற்று நேரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையில் இருந்து, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வரை 'அமைதிப் பேரணி' நடைபெற உள்ளது. இந்த பேரணியில், தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரணி நிறைவடைந்ததும், அனைவரும் கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் கருணாநிதியை நினைவுகூர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
தலைவர் கலைஞர் - முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு! அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!
இன்று கருணாநிதி நினைவு தினத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க. தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.