அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகருக்கு, 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்பது வரவேற்கக்கூடியது தான். ஆனால், பெண்களிடம் சொன்னால் 'தூக்கு தண்டனை கொடுங்கள்' என்று தான் சொல்வார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். குறிப்பாக, சாகும்வரை ஆழ்ந்த தண்டனை பெற வேண்டும் அல்லது தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இது மக்களின் கருத்து," என்று தெரிவித்தார்.
"குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க கூடாது என்றும், ஞானசேகருக்கு 30 ஆண்டுகள் தண்டனை சரிதான் என்றும். ஆனால் அதே நேரத்தில், அவருக்கு உதவி செய்தவர்கள் யார்? அவரது குற்றத்தின் பின்னால் யார் யார் இருக்கின்றனர்? யார் அந்த சார் என்பதற்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
"நீதிமன்றத்தின் தீர்ப்பை எல்லாம் தங்கள் சாதனையாக திமுக சொல்லிக் கொள்கிறது" என்றும், "அவர்கள் கூறும் மாதிரி பார்த்தால், வேங்கை வயல் பிரச்சனையில் இன்னும் ஏன் தீர்வு கிடைக்கவில்லை?" என்றும் அவர் கூறினார்.