Publish Date: Tue, 13 Aug 2024 (14:33 IST)
Updated Date: Tue, 13 Aug 2024 (14:36 IST)
நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, முதலீடு செய்தவர்களிடம் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதனை புதுக்கோட்டையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கைதான தேவநாதன் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வந்தார். மேலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் சிவகங்கை தொகுதியில் தேவநாதன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.