Publish Date: Thu, 25 Apr 2019 (14:14 IST)
Updated Date: Thu, 25 Apr 2019 (14:15 IST)
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் புயல் ஒன்று கரையைக் கடக்க இருப்பதாகவும் அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் அந்தப் புயல் கரையைக் கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்லி மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை குழுவை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலங்களில் கஜா மற்றும் ஓகி புயலால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபானி புயல் எவ்விதமான விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.