Publish Date: Sat, 17 Feb 2018 (15:58 IST)
Updated Date: Sat, 17 Feb 2018 (16:02 IST)
நெல்லையில் ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்கள் குறிப்பிட்ட ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் 20,000-த்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஐந்து கடைகள் மூலம் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கு உள்ள ரேஷன் கடை ஒன்றில் நேற்று ரேஷன் பொருட்களோடு பிஸ்கெட்டுகளும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த பிஸ்கெட்டுகள் காலாவதியாகி இருந்தன. இதனால் அத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த உயர் அதிகாரிகள் பிஸ்கெட் பேக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர். மேலும், இது போன்று மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்ததால் மக்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டனர்.