Publish Date: Tue, 21 Mar 2023 (21:57 IST)
Updated Date: Tue, 21 Mar 2023 (22:02 IST)
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண் வீட்டார் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,''இத்தகைய தீங்கான போக்கு துடைத்தெறியப்பட வேண்டும்'' என்று திருமாவளவன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகேயுள்ள கிட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்(28). இவர், அதேபகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரின் காதலுக்கும் சரண்யாவின் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், இன்று மதியம் கே.ஆர்.பி அணை அருகில் ஜெகன் தன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது., மறைந்திருந்த ஒரு கும்பல அவரை சரமாறியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தது.
இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜெகன் உயிரிழந்தார். இந்தக் கொலையில், சரண்யாவின் குடும்பத்தினர் தான் ஆட்களை ஏவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் தன் டுவிட்டர் பக்கத்தில், காதலின் மீதான வெறுப்பு அரசியல் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டதன் விளைவால் ஒரே சாதி எனினும் கிருஷ்ணகிரி ஜெகன் ஆணவப் படுகொலை. பெற்ற மகளையே விதவையாக்கிய குரூரம். சாதி கவுரவம்,
குடும்ப கவுரவம் போன்றவை சனாதனத்தின் கேடான உளவியல். இத்தகைய தீங்கான போக்கு துடைத்தெறியப்பட வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.