Publish Date: Mon, 03 Sep 2018 (10:49 IST)
Updated Date: Mon, 03 Sep 2018 (10:52 IST)
ஈரோட்டில் அதிமுக எம்.எல்.ஏ திருமணம் செய்யவிருந்த இளம்பெண், கடைசி நேரத்தில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன்(43). இவருக்கும் உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அவர்களுக்கு வரும் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். திருமணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மணப்பெண் சந்தியா தனது தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின் அவர் வீடு திரும்பவே இல்லை.
இதுகுறித்து சந்தியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மணமகளுக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லையா அல்லது அவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.