Publish Date: Wed, 04 Dec 2019 (16:07 IST)
Updated Date: Wed, 04 Dec 2019 (16:09 IST)
ஈரோட்டில் சிறு தொழில் நடத்தி வந்த ஒருவர் மத்திய, மாநில அரசுகளே தன் தற்கொலைக்கு காரணம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அந்த பகுதியில் தறி பட்டறை நடத்தி வந்த கனகராஜுக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கனகராஜ் மொக்கம்பாளையம் சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து கனகராஜின் உடலை மீட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்கொலை செய்து கொள்ளும் முன் கனகராஜ் எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் ஜவுளி துறையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தன் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் எனவும் எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.