Publish Date: Thu, 12 Apr 2018 (16:17 IST)
Updated Date: Thu, 12 Apr 2018 (16:19 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த இரு மாநிலங்களிலும் ஏராளமான போராட்டங்கள் நடந்து வருகிறது.
அந்நிலையில், சென்னை திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை திறந்து வைக்க இன்று மோடி சென்னை வந்தார். அதன் சென்னையில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் “ காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனுவை அளித்துள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வளவு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு காட்டியும், அரசியல் காரணத்திற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மோடி தலைமையிலான மோடி அரசு, எடப்பாடி மனு கொடுத்தவுடன் அமைத்து விடுமா? என சிலர் சமுக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், எடப்பாடி மனு கொடுத்துவிட்டார். சீக்கிரமே காவிரி மேலாண்மை வாரியம் வந்துவிடும் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.