Publish Date: Sat, 24 Feb 2018 (11:22 IST)
Updated Date: Sat, 24 Feb 2018 (11:42 IST)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது. அதேபோல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழும் வெளியிடப்பட்டது.
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை 11.10 மணியளவில் திறந்து வைத்தனர். மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தை ஜெ. காட்டிக் கொண்டிருப்பது போல் அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலை திறக்கப்பட்ட போது, அதிமுக தொண்டர்கள் புரட்சித் தலைவி வாழ்க என கோஷம் இட்டனர். இந்த விழாவில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் ஜெ.வின் சிலைக்கு ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் உள்ளிட்ட அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.