Publish Date: Sat, 09 Mar 2024 (09:21 IST)
Updated Date: Sat, 09 Mar 2024 (09:22 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென ஐந்து இடங்களில் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர் என்பதும், குறிப்பாக தமிழக அமைச்சர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே..
இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் சோதனை செய்து வருவதாகவும் சென்னை கோட்டூர் புறத்தில் விஷ்ணு என்பவர் வீட்டில், சென்னை அண்ணா நகரில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டில், தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் தெரிகிறது.
கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி சென்னை உள்பட தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் திடீரென இன்று சென்னையின் பல இடங்களில் மீண்டும் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.