அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர் மற்றும் மகன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், நேருவின் சகோதரரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் சகோதரர்கள், சகோதரி மற்றும் மகனின் வீடு, அலுவலகம் என 15க்க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்றது. சோதனைக்குப் பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனம் காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளாக நேருவின் மகன் அருண் மற்றும் சகோதர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேருவின் சகோதரரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து, விசாரணைக்கு பின் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.