Publish Date: Mon, 12 Aug 2019 (16:08 IST)
Updated Date: Mon, 12 Aug 2019 (18:04 IST)
நெல்லை மாவட்டத்தில் ஒரு வீட்டில் இரவு வேளையில் நுழைந்த கொள்ளையர்கள், அங்கு வீட்டில் இருந்த முதியவர்களைத் தாக்க முற்பட்டனர். இதில் சுதாரித்த முதியவர்கள் திருடன்கள் மீது பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதில் அரண்டு போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கடையத்தில் ஒரு வீட்டில் முதியவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கொள்ளையடிக்க வந்த இரு திருடன்கள், வீட்டில் திண்ணையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த முதியவரின் கழுத்தை துண்டால் இறுக்கினர்... அப்போது அவர் சப்தம் எழுப்பவே... வீட்டுக்குள் இருந்து ஒரு வயதான அம்மா வெளியே வந்து கொள்ளையன்களைப் பார்த்து, துணிச்சலுடன் விரட்டினார்.
ஆனால் திருடன்கள் கையில் அருவாளுடன் வெட்ட வரவே, வீட்டில் அங்கிருந்த சேரை , எடுத்து அவர் மீது வீசினார். அப்போது கீழே சரிந்து வி்ழுந்த முதியவரும் எழுந்து வந்து சேரை எடுத்து சிறுதும் பயப்படாமல் திருடன்களை அடித்து விரட்டினார். அந்த திருடன்கள் இரு முதியவர்களுடன் அடி தாங்க முடியாமல் ஓடிவிட்டனர். இந்த காட்சிகள் வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்தக் காட்சிகள் வைரலாகிவருகிறது.