கலக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி: கரெக்டா வருவாங்களா?
கலக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி: கரெக்டா வருவாங்களா?
Publish Date: Tue, 05 Sep 2017 (09:25 IST)
Updated Date: Tue, 05 Sep 2017 (09:45 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமைக்கழகத்தில் இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அதிகமாக வருவார்களா என்ற கலக்கத்தில் உள்ளாராம்.
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் வரும் 12-ஆம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழுக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 20 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை.
அதே நேரத்தில் இந்த கூட்டத்துக்கு மீதமுள்ள அனைத்து எம்எல்ஏக்கள் வந்திருப்பார்கள் என நினைத்த எடப்பாடிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைச்சர்கள் உள்பட 72 பேர் தான் வந்திருந்தார்களாம். இதனால் பொதுக்குழு கூட உள்ளதை முன்னிட்டு இன்று நடைபெற உள்ள கூட்டத்துக்கு 100 எம்எல்ஏக்களாவது வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கிறாராம்.
இதற்காக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடியே போன் போட்டு இன்று நடைபெற உள்ள கூட்டத்துக்கு தவறாமல் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரும் தினகரன் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களையும் வரவழைக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
குறைந்தது 100 எம்எல்ஏக்களாவது வர வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழு 12-ஆம் தேதி கூட்டப்பட உள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க கூட்டப்பட்டு உள்ள இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்காகவே முதல்வர் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் குறியாக உள்ளார்.