Publish Date: Wed, 28 Feb 2024 (11:48 IST)
Updated Date: Wed, 28 Feb 2024 (11:49 IST)
சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தனது உடல் நலக்குறைவு காரணமாக தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார். எனவே, கட்சிப்பணிகள் செவ்வனே நடக்க பெரம்பலூர் வீ.ஜெகதீசன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் த.இளையஅருணாவை விடுவித்து, அவருக்கு பதில் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.சேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இளைய அருணா, திமுகவில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் தேர்தலில் கடும் போட்டிக்கிடையில் கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்டவர்.
ஆனால், தேர்தல் பாக பொறுப்பாளர்கள் கூட்டத்தை சரியாக நடத்தாதது, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்னை வடக்கு மாவட்டத்தின் கீழ் வரும் தொகுதிகளில் உள்ள எம்எல்ஏக்களை அழைக்காதது உள்ளிட்ட காரணங்களால் தலைமைக்கு புகார் சென்றதாகவும், அதன்பேரில் அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.