ஜெயா தொலைக்காட்சியில் துரைமுருகன் பேட்டி - விவேக்குடன் மோதிய தினகரன்
Publish Date: Tue, 21 Nov 2017 (12:38 IST)
Updated Date: Tue, 21 Nov 2017 (13:03 IST)
ஜெயா தொலைக்காட்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் அளித்த பேட்டி தினகரன் தரப்பினரை அதிர்ச்சி மற்றும் கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சசிகலா குடும்பத்தினரை வருமான வரித்துறையினர் குறி வைத்திருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் திமுகவை சேர்ந்த துரைமுருகன் பேட்டி ஒளிபரப்பானது. இதைக்கண்ட பல அதிமுகவினரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில், ஜெயலலிதா இருந்தவரை திமுகவினர் பேட்டி எதுவும் அதில் வெளிவராது. ஏன், அவர்கள் பற்றிய செய்தி கூட பெரிதாக ஒளிபரப்ப மாட்டார்கள். இந்நிலையில்தான், துரைமுருகனின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.
அந்த பேட்டியில் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்து துரைமுருகன் வெளுத்து வாங்கினார். இந்த பேட்டியை பார்த்த தினகரன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.
உடனடியாக விவேக்கை தொலைப்பேசியில் அழைத்த தினகரன், நமக்கும் எடப்பாடிக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். அது வேறு. ஆனால், துரைமுருகனை ஏன் பேட்டி எடுத்தாய் எனக் கேட்க, ‘அவரு நமக்கு ஆதரவாகத்தான் பேசினார்’ என விவேக் கூற, நாம எல்லோரும் அடிச்சுக்கறது அவங்களுக்கு கொண்டாட்டமாத்தான் இருக்கும். அதை நீ வேற பேட்டி எடுத்து போடுவியா? இது சின்னம்மாவிற்கு தெரிந்தால் என்னவாகும் தெரியுமா? என ஒரு பிடி பிடித்தாராம்.
ஜெயா தொலைக்காட்சியை தற்போது விவேக்தான் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்