Publish Date: Wed, 15 May 2024 (14:40 IST)
Updated Date: Wed, 15 May 2024 (14:44 IST)
கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கோவையின் முக்கியமான பேருந்து நிலையமாகும், இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில் வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் இரண்டு பேருந்திற்கு நடுவில் சிக்கி பேருந்திற்கு காத்திருந்த பயனி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சக பயனிகள் கூச்சலிட்டு அலரியடித்து ஓடினார்கள்.
உடனடியாக அங்கு இருந்த சக பேருந்து ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி ஓட்டுனரை கீழே இறக்கியதில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டுனரை சரமாரியாக தாக்கி போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு, என்றும் விபத்தில் பலியானவர் சிவக்குமார் என்பதும் தெரியவந்துள்ளது.