Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாக்டர் அகர்வால்ஸ், இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து நடத்திய உலக பார்வை தினம் நிகழ்வு!

டாக்டர் அகர்வால்ஸ்,  இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து நடத்திய உலக பார்வை தினம் நிகழ்வு!
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (20:31 IST)
சென்னையில் கண் கண்ணாடிகள் வடிவை உருவாக்க ஒருங்கிணைந்த மக்கள் கூட்டம்.  டாக்டர் அகர்வால்ஸ்,  இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து நடத்திய உலக பார்வை தினம் நிகழ்வு.

‘உலக பார்வை தினம் 2023’ அனுசரிப்பின் ஒரு பகுதியாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்வி நிறுவனம், கண் பராமரிப்பு மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தொண்டு நிறுவனமான இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் (IVI) உடன் இணைந்து ஒரு தனித்துவமான நிகழ்வை இன்று அரங்கேற்றியது. ஒரு ஜோடி கண் கண்ணாடிகள் வடிவ தோற்றத்தை மனிதர்களை கொண்டு உருவாக்கும் இந்த நேர்த்தியான முயற்சியில் 500 – க்கும் அதிகமான நபர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள், கண் மருத்துவர்கள், மாணவர்கள், பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இம்முயற்சியில் பங்களிப்பை வழங்கினர். சென்னை மாநகரின் எலியட்ஸ் கடற்கரையில், கண் கண்ணாடிகள் உருவத்தை மனிதர்களின் பங்கேற்புடன் உருவாக்கும் இம்முயற்சி, உலகில் எந்தவொரு இடத்திலும் மிக அதிகமான நபர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உருவ அமைப்புகளுள் ஒன்று என்ற பெருமைக்குரியது. 

சென்னை கிழக்கு – ன் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திரு. சமாய் சிங் மீனா ஐபிஎஸ், இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். சென்னை மாநகரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடிமக்கள், தங்கள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு பங்கேற்ற ஒரு நடைப்பயிற்சியும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக நடைபெற்றது. பார்வைத்திறன் பாதிப்புள்ள குழந்தைகளும், வயதுவந்த நபர்களும், கண்கள் கட்டப்பட்ட நிலையில் நடைப்பயிற்சி நிகழ்வை முன்னெடுத்துச் சென்றனர். லாரன்ஸ் & மேயோ கண் கண்ணாடியகம், இந்த முன்னெடுப்பு நிகழ்விற்கு ஆதரவளித்தது.

குருட்டுத்தன்மை வராமல் தடுப்பதற்கான சர்வதேச முகமையின் ஆதரவோடு நடத்தப்படும் ‘உலக பார்வைத்திறன் தினம்’, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது  வியாழக்கிழமை அன்று உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. பணியமைவிடங்களில் கண்களது பார்வைத்திறன் ஆரோக்கியத்தை கவனமுடன் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘பணியில் உங்களது கண்களை நேசியுங்கள்’ என்ற கருத்தாக்கம் இந்தாண்டு உலக பார்வைத்திறன் தின அனுசரிப்பின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. 

டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவியல் கல்வி நிறுவனத்தின் டீன் டாக்டர். டி. கற்பகம், இது தொடர்பாக பேசுகையில், “பார்வைத்திறன் குறைபாடு அல்லது பார்வையின்மையோடு உலகெங்கிலும் 2.2 பில்லியன் நபர்கள் வாழ்ந்து வருகின்றன என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலைக்கு கண்புரை நோய் மற்றும் சரிசெய்யப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகள் என்பவையே இரு முக்கிய காரணங்களாக முறையே 40 % மற்றும் 30% - க்கும் அதிகமான பங்கினை கொண்டிருக்கின்றன. ஆனால் பார்வைத்திறன் பாதிப்பு நிலைகளுள் 80% - க்கும் அதிகமான நேர்வுகள், ஏற்படாமல் முன்தடுக்கப்பட கூடியவை அல்லது உரிய கால அளவிற்குள் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்பட கூடியவையாக இருக்கின்றன. பார்வைத்திறன் ஆரோக்கியம் என்பது அடிப்படையான மனித உரிமைகளுள் ஒன்றாகும்.

பணியாற்றும் / தொழில் செய்யும் இடங்களில் இருக்கும்போது, தங்களது கண்களை மக்கள் எப்படி கவனத்துடன் பராமரிக்கின்றனர் என்பதையே  இது பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. இப்பிரச்சனையின் அளவு மற்றும் தீவிரம் குறித்து விழிப்புணர்வை உருவாக்க இந்த வித்தியாசமான நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறோம்; அத்துடன் பணியிடங்களில் பார்வைத்திறன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக உறுதியான நடவடிக்கைகளை எடுத்து தனிநபர்களையும், நிறுவனங்களையும் மற்றும் அரசு அமைப்புகளையும் ஊக்குவிப்பதும இந்நிகழ்வின் மற்றொரு குறிக்கோளாகும்” என்று குறிப்பிட்டார். 

இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட்–ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. வினோத் டேனியல் பேசுகையில் கூறியதாவது; “பணியில் அதிக திறம்பட செயல்படவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிக நம்பிக்கையுள்ளவர்களாக திகழவும், விபத்துகள் மற்றும் தவறி விழும் நிகழ்வுகளை குறைக்கவும் மக்களுக்கு தெளிவான பார்வைத்திறன் உதவுகிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது; அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் குடிமக்களின் சிறப்பான பார்வைத்திறன் உதவுகிறது என்பதை மறுக்க இயலாது. பார்வைத்திறன் பாதிப்போடு அல்லது குருட்டுத்தன்மையோடு வாழும் நபர்கள் இன்னும் ஏழ்மையான நிலைக்கே இட்டுச்செல்லப்படுகின்றனர் மற்றும் வறுமைக் கோட்டிற்கும் கீழே தள்ளப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

கடற்கரை மணலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களால் உருவாக்கப்பட்ட கண் கண்ணாடிகள் தோற்ற வடிவமைப்பு, ஒளிக்கதிர் விலகல் குறைபாட்டை சரிசெய்வதற்காக கண்களை குறிப்பிட்ட கால அளவுகளில் ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை வலுவாக நினைவூட்டும். தெளிவான பார்வைத்திறனை கொண்டிருப்பதற்கு பலருக்கும் தேவைப்படுவது ஒரு ஜோடி கண்ணாடிகள் மட்டுமே. இச்செய்தியினை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு எமது IVI அமைப்புடன் இணைந்து செயல்படும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைக்கு எமது மனமார்ந்த நன்றி. இந்த முன்னெடுப்பிற்கு எங்களுக்கு ஆதரவளித்திருக்கும் லாரன்ஸ் & மேயோ நிறுவனத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்”. 

மொபைல்கள், கணினிகள் அல்லது லேப்டாப்கள் போன்ற டிஜிட்டல் துறை சார்ந்த சாதனங்களின் நீண்டநேர பயன்பாடு, பணியாளர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்திருக்கின்றன என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கருவிழி படலம் மற்றும் ஒளிக்கதிர் விலக்க அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். ரம்யா சம்பத், சுட்டிக்காட்டினார். “20-20-20 என்ற விதியை கடைப்பிடிப்பது மிகப்பெரிய அளவிற்கு கண்களில் அழுத்தமும், பிரச்சனைகளும் ஏற்படுவதை குறைக்கக்கூடும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையை இத்தகைய சாதனங்களின் திரைகளிலிருந்து அகற்றுவது; 20 நொடிகள் நேரத்திற்கு 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை உற்றுநோக்குவது என்பதே இந்த விதி. கண்கள் உலராமல் தடுப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 14 தடவைகள் கண்களை சிமிட்ட வேண்டும்.

வீடுகள், அறைகளுக்கு வெளியே ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் செலவிடுவதும் மற்றும் சூரிய ஒளி அதிகமாகவுள்ள நாட்களில் குளிர் கண்ணாடிகளை அணிவதும் முக்கியம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது, புகைப்பிடிப்பதை கைவிடுவது ஆகிய நடவடிக்கைகள், கண்களின் பார்வைத்திறன் ஆரோக்கியம் உட்பட நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை” என்று டாக்டர் ரம்யா சம்பத் விளக்கமளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனநலத்தை மேம்படுத்த இயற்கையுடன் தொடர்பில் இருங்கள் - சத்குரு அறிவுரை!