Publish Date: Wed, 06 May 2020 (16:43 IST)
Updated Date: Wed, 06 May 2020 (17:03 IST)
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்ய வாய்ப்பில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அரசின் இந்த முடிவுக்கு பொதுத்தளத்தில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் அளவுக்கதிகமானக் கூடடம் வரும் அதனால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியாது எனக் கூறியிருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபத்கள் ‘மதுபாட்டில்களை ஆன்லைனில் விற்பனை செய்து டோர் டெலிவர் செய்ய முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதுகுறித்து பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ‘அதற்கு வாய்ப்பு இல்லை ‘ எனத் தெரிவித்துள்ளார். மேலும் ‘: கொரோனா முடியும் தருவாயில் உள்ளது. எனவே மற்ற கடைகள் போல் மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது. இதில் சமூக விலகல் பின்பற்றப்படும். ஆன்லைனில் மது விற்பனை இல்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.