Publish Date: Tue, 06 Feb 2018 (11:30 IST)
Updated Date: Tue, 06 Feb 2018 (11:32 IST)
ஆளும் அதிமுகவின் ஆட்சி அடுத்த வாரம் கலைந்து விடும் என திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அதேபோல், ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த ஆட்சி கலையும் என கூறி வருகிறார்.
இந்நிலையில், நீட் தேர்விற்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்.ஏல். ஏ அன்பழகன் “எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை அவர் ராஜினாமா செய்ய தேவையில்லை. அவருக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே தற்போது இருக்கிறது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வர உள்ளது. அந்த தீர்ப்புக்கு பின் இந்த ஆட்சி அதுவே கலைந்து விடும்” என அவர் பேசியுள்ளார்.
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியான பின் எடப்பாடி ஆட்சி கலைந்து விடும் என டிடிவி தினகரனும் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.