Publish Date: Fri, 07 Aug 2020 (08:20 IST)
Updated Date: Fri, 07 Aug 2020 (08:23 IST)
இன்று தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்படும் நிலையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி காலமாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுறுகின்றது. கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது கலங்கரைவிளக்கம் முதல் ஊர்வலமாக சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சில முக்கிய தலைவர்கள் மட்டுமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நினைவிடத்திற்கு சிறிது தொலைவிலிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்றுள்ளார். அவருடன் துரைமுருகன், கனிமொழி எம்.பி. டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினரும் ஊர்வலமாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.