Publish Date: Fri, 06 Sep 2019 (08:53 IST)
Updated Date: Fri, 06 Sep 2019 (08:53 IST)
சிதம்பரத்தைப் போல் எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படலாம் எனக் கூறிய ஹெச் ராஜாவுக்கு திமுக வின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் தேதிகைது செய்யப்பட்டார். சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் பின்னர் மேலும் 5 நாட்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது அவர் டெல்லி சிபிஐ வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.இதுவரை மூன்று முறை அவரது சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றோடு அவரது ஐந்தாவது காவல் நீட்டிப்பு முடிகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஹெச் ராஜா ‘ சிதம்பரம் ஒரு ஊழல்வாதி என்பதைப் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ஊழல் செய்தால் ஜெயிலுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் அவரோ திகார் சிறைக்கு செல்ல மாட்டேன் என்கிறார். இன்று ப சிதம்பரத்துக்கு ஏற்பட்டுள்ள கதி எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஏற்பட நேரிடும்’ என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார். அதில் ‘ ஹெச் ராஜா கடவுளாகக் கூட மாறுவார். கைது செய்வதற்குக் காரணம் வேண்டும். அதில்லாமல் ஹெச் ராஜா இப்படிக் கூறுகிறார் என்றால் அது மிரட்டலாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.