Publish Date: Fri, 06 Sep 2019 (08:44 IST)
Updated Date: Fri, 06 Sep 2019 (08:46 IST)
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டதற்கு முன்பாகவே சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் சென்றனர். இந்நிலையில் அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வராக யாரையும் நியமிக்காமல் சென்றார் முதல்வர். அங்கிருந்தபடியே வீடியோ கான்பரன்ஸிங் மூலம் முக்கியமானப் பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.
இந்தப் பயணம் செப்டம்பர் 9 ஆம் தேதி துபாயில் முடியும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 7 ஆம் தேதியே முதல்வர் அமெரிக்காவில் இருந்து நேரடியாக சென்னை வந்து சில நாட்கள் தங்கிவிட்டு அதன் பின் மீண்டும் துபாய் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.