Publish Date: Fri, 01 Mar 2019 (10:53 IST)
Updated Date: Fri, 01 Mar 2019 (10:55 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுடன் உரையாடும் உங்கள் சகோதரனின் குரல் என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தனது 67 ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். கலைஞர் இறந்து ஒரு வருடம் இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதால் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் எனவும் தன்னைப் பார்க்க நேரில் தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என அன்புக்கட்டளை இட்டுள்ளார். ஆனாலும் தொண்டர்கள் அவரது பிறந்த நாளை அன்னதானம் உள்ளிட்ட நற்சேவைகளை செய்துவருகின்றனர்.
இதையடுத்து கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்காகவும் உங்கள் சகோதரனின் குரல் எனும் பெயரில் ஒரு வீடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘ஆளும் பாஜக அரசையும் அதற்கு அடிபணிந்து போகும் அதிமுக ஆட்சியையும் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். பாஜக அரசு செயல்படுத்தத் துடிக்கும் ஒரே இந்தியா ஒரே மக்கள் எனும் ஒற்றைத் தனமைக் கொண்ட கருத்தாக்கத்திற்கு எதிராக சமூக நீதிக் கொள்கைகளை விதைக்கப்பட வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரைக் கூறியுள்ளார்.
மேலும் திராவிட இயக்கத்தின் இப்போதைய வளர்ச்சிக்கு பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் அளவற்ற பங்களிப்பைப் பற்றியும் நினைவுக் கூர்ந்துள்ளார். கழகத் தொண்டர்களுக்கும் கழகப் பேச்சாளர்களுக்கும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் கொள்கைகளான ‘சுயமரியாதை, சமூக நீதி மற்றும் சகோதரத்துவம்’ ஆகியவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
உங்கள் சகோதரனின் குரல் என்ற இந்த இணையப்பக்கத்தின் மூலம் ஸ்டாலின் இனித் தொடர்ந்து மக்களிடம் உரையாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.