Publish Date: Tue, 14 Aug 2018 (07:16 IST)
Updated Date: Tue, 14 Aug 2018 (08:08 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த நிலையில், திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.
திமுக தலைவராக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் இன்று திமுக செயற்குழு கூட்டம் முதல்முறையாக நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் திமுகவின் புதிய தலைவர் யார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவே இக்கூட்டம் நடைபெறுவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கலைஞரின் நினைவிடத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முக அழகிரி “என் தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கமே உள்ளனர்” என கூறினார். இது திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரை கட்சியில் சேர்க்க அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கட்சி தொடர்பான என் ஆதங்கத்தை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சொல்கிறேன்” என அழகிரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய செயற் குழுக்கூட்டத்தில் திமுகவில் தனக்கு முக்கியப் பதவி கொடுக்காவிட்டால், அழகிரி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராவார் என பேசப்படுகிறது.