Publish Date: Tue, 05 Jan 2021 (12:03 IST)
Updated Date: Tue, 05 Jan 2021 (12:05 IST)
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு டோக்கனில் கட்சி தலைவர்கள் புகைப்படம் அச்சிட தடை விதிக்கப்பட்ட நிலையில் பேனர் வைக்கப்படுவதாக திமுக மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு அரசு சார்பில் பொங்கல் பையும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பைக்கான டோக்கனில் அதிமுக தலைவர்கள் படங்கள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதுகுறித்த விசாரணையில் டோக்கன்களில் கட்சி தலைவர்கள் படம் இடம்பெறகூடாது என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், உணவு வழங்கல் துறை வழங்கும் டோக்கன்களில் தலைவர்கள் படம் அச்சிடப்படவில்லை என்றும், கட்சியினர் விநியோகித்த டோக்கன் செல்லாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும் கட்சிரீதியான பிரச்சினைகளுக்காக அடிக்கடி நீதிமன்றத்தை நாட வேண்டாம் என திமுகவிற்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது பொங்கல் பை வழங்கும் அங்காடிகளில் அதிமுக விளம்பர பேனர்கள் வைப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது திமுக. இதுகுறித்து வழக்கு தொடர அனுமதி வேண்டி நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.