Publish Date: Mon, 29 Apr 2019 (12:51 IST)
Updated Date: Mon, 29 Apr 2019 (12:52 IST)
தமிழகத்தில் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களோடு சேர்த்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் இந்த தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா எனும் நிலைமையில் உள்ளது.
இந்த 4 தொகுதிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையேக் கடுமையானப் போட்டி நிலவி வருகிறது. இருக் கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்கான வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தங்கள் ஆதரவை அதிமுகவிற்கு அளித்துள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தமிழகத்தில் நடக்க இருக்கிற நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடுகின்ற அனைத்திந்திய அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது. அந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேமுதிக தொண்டர்கள் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு அயராது பாடுபடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.