Publish Date: Fri, 04 May 2018 (12:27 IST)
Updated Date: Fri, 04 May 2018 (12:29 IST)
நடிகரும், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியருமான சோ மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோரின் ஆலோசனைப்படியே, போயஸ்கார்டனிலிருந்து சசிகலாவை, ஜெயலலிதா வெளியேற்றினார் என திவாகரன் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மணம் தொடர்பான விசாரணை, தமிழக அரசு அமைத்த ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. சசிகலாவின் சகோதரர் திவாரன் நேற்று அந்த ஆணையத்தில் ஆஜராகி சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் பல கேள்விகளை விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி முன்வைத்தார். அனைத்திற்கும் திவாகரன் பதிலளித்தார்.
ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் 2 முறை அங்கு சென்றேன். ஆனால், அவரை பார்க்கமுடியவில்லை. அவருடன் சசிகலா மட்டுமே இருந்தார். அமைச்சர்கள் பார்த்தார்களா இல்லையா என எனக்கு தெரியாது. அவரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அவரின் மரணம் இயற்கையானதுதான் என அவர் கூறியிருந்தார்.
மேலும், சோ, ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆகியோரின் ஆலோசனை படியே 2011ம் ஆண்டு சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். அதன் பின்பு நான் போயஸ்கார்டன் வீட்டிற்கு செல்லவில்லை என திவாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.