Publish Date: Wed, 02 May 2018 (17:40 IST)
Updated Date: Wed, 02 May 2018 (17:47 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தார் ஆனால் அவரை ஜெ. பார்க்கவில்லை என சசிகலாவின் உறவினரும், ஜெ.வின் மருத்துவருமான சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. எனவே, அதுகுறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த விசாரணை ஆணையம் பல மாதங்களாக பலரையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜெ.விற்கு நீண்ட வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தவரும், சசிகலாவின் உறவினருமான மருத்துவர் சிவக்குமார் ஏற்கனவே பலமுறை வாக்குமூலம் அளித்த நிலையில், இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, மருத்துவமனை கண்ணாடி வழியாக ஜெ.வை ஆளுநர் பார்த்தார். ஆனால், அவரை ஜெ. பார்க்கவில்லை. ஜெ.வுடன் சசிகலா மட்டுமே தினமும் இருந்தார். அமைச்சர் நிலோபர்கபில் மட்டுமே ஜெ.வை நெருக்கமாக பார்த்தார். காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது ஜெ. மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவுப்படி குறுக்கு விசாரணையின் போது மீண்டும் ஆஜர் ஆவேன் என அவர் தெரிவித்தார். ஜெ. தன்னை பார்த்து கை அசைத்ததாக அப்போதையை ஆளுநர் வித்யாசாகர் தெரிவித்திருந்த நிலையில், மருத்துவர் சிவகுமாரின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.