Publish Date: Thu, 16 Jul 2020 (11:16 IST)
Updated Date: Thu, 16 Jul 2020 (11:18 IST)
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கொடியேற்றம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. கால பூஜைகள் செய்வதற்காக அர்ச்சகர்கள் மட்டுமே உள்ளே சென்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொடியேற்றம் தொடங்கி 9 நாட்கள் பூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று பராமரிப்பு பணிகள் மற்றும் பூஜைக்காக ஆண்டாள் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டாள் கோவில் பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக சுற்று வட்டாரத்தில் வதந்தி பரவியுள்ளது. இதை நம்பி பக்தர்கள் கூட்டம் மாஸ்க் அணிந்தபடி கோவிலுக்கு படையெடுத்துள்ளது. திரளான கூட்டம் வந்ததால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பக்தர்கள் பலர் உள்ளே சென்று வழிபாடு செய்து வந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆண்டாள் கோவில் தேர் திருவிழாவை பக்தர்கள் இன்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.