Publish Date: Fri, 03 Aug 2018 (19:44 IST)
Updated Date: Fri, 03 Aug 2018 (19:48 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.
இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று கேட்டறிந்தர். ஏற்கனவே இலங்கை அதிபர் சிறிசேனா அவர்கள் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என கடிதம் அனுப்பினார்.
அடுத்து இந்திய பிரதமர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சினிமா நடிகர்கள் பலரும் நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலத்தை பற்றி விசாரித்து வந்தனர்.
இன்று கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடா கருணாநிதியின் உடல் நலத்தை விசாரிக்க சென்னை வந்திருந்தார். அப்போது அவர் பின்வருமாறு பேசினார், இந்த நாட்டின் மிக மூத்த தலைவர் கருணாநிதி. ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர்.
தமிழ்நாட்டுக்கு பல சேவைகளை செய்தவர். வாஜ்பாயி, மன்மோகன் சிங் காலத்திலும் என்னுடைய காலத்திலும் அரசு அமைப்பதற்கு காரணமாக இருந்தவர். உறுதியான மனிதர். அவர் உடல் நலம் பெற்று நெடு நாள் வாழ வேண்டும். அவர் நூறு வயதை தாண்டியும் வாழ வேண்டும் என கூறினார்.