Publish Date: Sat, 18 Dec 2021 (11:33 IST)
Updated Date: Sat, 18 Dec 2021 (12:19 IST)
தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நில நடுக்கோட்டு பகுதியில் இந்திய பெருங்கடல் அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் 17 ஆம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நில நடுக்கோட்டு பகுதியில் இந்திய பெருங்கடல் அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.