கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு வருவதை அடுத்து, இதன் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக கிளம்பி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், சென்னை நகரத்திலும் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
அதேபோல், இந்த பகுதி வழியாக செல்லும் ரயில்களும் தாமதமாக கிளம்பி வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், பனிமூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில், குறைந்த வேகத்தில் ரயிலை இயக்குமாறு ரயில்வே துறை அதிகாரிகள் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்து ரயில்களும் தாமதமாக வருவதால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.