Publish Date: Thu, 12 Dec 2024 (16:58 IST)
Updated Date: Thu, 12 Dec 2024 (17:05 IST)
வங்கக் கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, இன்னும் ஓரிரு நாளில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி விரைவில் வலு குறைந்துவிடும் என்றும், ஆனால் டிசம்பர் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை எப்போதும் இல்லாத வகையில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 16 சதவீதம் அதிகமாக உள்ளது என்றும், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்றும், நாளை தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலை சரியாக கணிக்க முடியாததற்கான காரணம் புயலின் திசையை சரியாக கணித்தாலும் அதன் திறனை கணிப்பதில் தவறு ஏற்பட்டது என்றும் இது உலகம் முழுவதும் உள்ள வானிலை கணிப்புகளில் ஏற்படும் தவறுகளில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.