Publish Date: Fri, 03 Dec 2021 (17:04 IST)
Updated Date: Fri, 03 Dec 2021 (17:24 IST)
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலைக்கு சிபிஐ விசாரணை தேவை.
மறைந்த வெங்கடாசலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். இவர் தனது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் வெங்கடாசலம் நேற்று மதியம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட மன அழுத்தம் காரணமாக வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டாரா? எனும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதோடு, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் எதிர்க்கட்சியை திமுக அரசு மிரட்டி வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.