Publish Date: Sun, 01 Dec 2019 (11:20 IST)
Updated Date: Sun, 01 Dec 2019 (11:23 IST)
தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விடுமுறையில் இருக்கும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சுமார் 500 பேர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக விருத்தாசலம் - கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இந்த பாதிப்பை சரிசெய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் கனமழை காரணமாக நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு அடைந்துள்ளதாகவும், இருப்பினும் நிலக்கரி போதுமான அளவு இருப்பு உள்ளதால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது