சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்று கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா? எனவே, மொழி பற்றி பேசும்போது மிகவும் கவனமாக பேச வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
"தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்" என்று சமீபத்தில் கமலஹாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக முதல்வர் உள்பட பல அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோவை வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்று சொன்னால் யாராவது ஏற்றுக்கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா? அதுபோல்தான் நாம் மொழி குறித்து பேசும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்" என்றும், "அவ்வாறு இருப்பவர்கள் தான் பொது வாழ்க்கையில் இருக்க தகுதியானவர்கள்" என்றும் தெரிவித்தார்.
"திமுகவை ஒழிப்பது தான் எனது வேலை" என்று கூறிய கமல்ஹாசன் புதிய இயக்கத்தை தொடங்கிய நிலையில், இன்று திமுகவோடு இருப்பதே தமிழகத்தின் நன்மை பயக்கும் என்று கூறுகிறார் என்றால், ஒரே ஒரு பதவிக்காக தான் அவர் அப்படி பேசுகிறார் என்று அர்த்தம் என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.