இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 2019ல் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி பல லட்சம் மக்களை பலி வாங்கியது. அதன் வேரியண்ட்கள் பல்வேறு காலக்கட்டங்களில் பரவி வந்த நிலையில், தற்போது கொரோனாவின் ஒமைக்ரான் வேரியண்ட் ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. முக்கியமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் 26 பேர் பலியாகியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் 685 கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கேரளாவில் 1,336 பேரும், மகாராஷ்டிராவில் 467 பேரும், டெல்லியில் 375 பேரும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 185 ஆக உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரித்தல், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகளை கையிருப்பு வைத்தலை உறுதி செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K