Publish Date: Thu, 13 Jun 2019 (14:27 IST)
Updated Date: Thu, 13 Jun 2019 (14:29 IST)
ராஜ ராஜ சோழன் பற்றி வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாக வைத்துப் பேசிய திரை இயக்குனர் பா ரஞ்சித்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டதாகவும் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவதாசிகளாக மாற கட்டாயப்படுத்த பட்டதாகவும் கடுமையான விமர்சித்தார். பா. ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் ஆதரவும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ரஞ்சித்தின் பேச்சுக்கு இந்து அமைப்புகளும் இந்து மத அபிமானிகளும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.
இதையடுத்துக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாக பா,.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.. இதனையடுத்து ரஞ்சித் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. அதைத் தடுப்பதற்காக ரஞ்சித் இப்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடமும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களையே நானும் குறிப்பிட்டேன். நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். ஆகவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.
ரஞ்சித்தின் கருத்துக்குப் பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலித் பிரிவு ‘சாதியத்தை எதிர்த்து பா.ரஞ்சித் தொடர்ந்து போராடி வருவது மிகவும் கவனிக்கத்தக்கது. நாங்கள் ரஞ்சித்துடன் உறுதியாக நிற்கிறோம்’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளது.