Publish Date: Fri, 01 Sep 2023 (13:46 IST)
Updated Date: Fri, 01 Sep 2023 (13:52 IST)
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு துணை ஆணையர் உமையாள், ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து நேரடி விசாரணை செய்து வருவதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில், சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தி, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற 8 மணி நேர விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பணவர்த்தனை, ஓட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜயலட்சுமி போலீஸிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய லட்சுமி அளித்த புகாரில் வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகிறது.
நடிகை விஜயலட்சுமியின் புகார் பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கவே வீண் பழி சுமத்தப்படுகிறது …என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.