Publish Date: Fri, 12 May 2017 (05:53 IST)
Updated Date: Fri, 12 May 2017 (05:56 IST)
சென்னையில் உள்ள மால்களில் மிகவும் முக்கியமானது ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதுண்டு.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு திடீரென எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஆயுதம் தாங்கிய போலீசார் வந்து இறங்கினர். நைட்ஷோ சினிமா பார்த்துவிட்டு திரும்பியவர்கள் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். ஷாப்பிங் மாலை சுற்றி காவல் துறையின் வாகனங்கள் அரண் அமைத்து நின்றதோடு, ஆயுதம் தாங்கிய கமாண்டோ படையினர், ஷாப்பிங் மாலுக்குள் செல்லும் பாதைகளை மறித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சினிமா படப்பிடிப்பா? அல்லது தீவிரவாதிகள் உள்ளே புகுந்துவிட்டார்களா? என்று அனைவரும் அதிர்ச்சியில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் பார்த்தபோது அதன்பின்னர் தான் தெரிந்தது அது தமிழக காவல் துறை கமொண்டோ பிரிவின் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை என்பது. இந்த தகவல் தெரிந்த பின்னர்தான் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.