Publish Date: Fri, 09 Mar 2018 (16:32 IST)
Updated Date: Fri, 09 Mar 2018 (16:47 IST)
சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதற்கு பின்னால் ஒரு தலைக்காதல் விவகாரம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று மாலை 3 மணியளவில் சென்னை கே.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூரி வாசலில், அந்த கல்லூரியில் பி.காம் படித்து வரும் அஸ்வினி என்கிற மாணவியை, கல்லூரி வாயிலிலேயே அழகேசன் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார்.
இதில், அஸ்வினி மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அஸ்வினியை குத்திய வாலிபரை பிடித்து அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின், அஸ்வினியை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அஸ்வினி மரணமடைந்தார்.
இதையடுத்து, அஸ்வினியின் தோழிகள், கல்லூரி நிர்வாகம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அஸ்வினி மதுரைவாயல் பகுதியை சேர்ந்தவர். அந்தப் பகுதியில் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்த அழகேசன் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவரின் காதலை அஸ்வினி ஏற்கவில்லை. ஆனாலும், அழகேசன் தொடர்ந்து தொல்லை கொடுக்க, அவர் மீது மதுரைவாயல் காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பின், அஸ்வினி ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அழகேசன், அஸ்வினி மீது உள்ள ஆத்திரத்தில் இன்று கல்லூரிக்கு வந்து அஸ்வினியின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் பட்டப்பகலில், கல்லூரி வாசலிலேயே ஒரு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.