Publish Date: Thu, 09 Mar 2023 (10:19 IST)
Updated Date: Thu, 09 Mar 2023 (10:21 IST)
ஆளுநருக்கு வாய் மட்டும்தான் இருக்கிறது என்றும் காதுகள் இல்லை என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் உங்களில் ஒருவன் பதில்கள் என்ற தொடரின் பதில்கள் வெளியாகி உள்ளது. அதில் ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது, மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு இதுவரையிலான செயல்பாடுகளை பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உள்ளது காதுகள் இல்லை என்று தோன்றுகிறது என்று பதில் அளித்துள்ளார்.
வடகிழக்கு மாநில தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த அவர் மேகாலயா மாநிலத்தில் 59 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இரண்டு தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது என்றும் திரிபுரா நாகலாந்து மாநில வெற்றியை பேசும் பாஜக இது குறித்து பேசுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு குறித்து கருத்து தெரிவித்த அவர் பாஜக ஆட்சிக்கு வரும்போது சிலிண்டரின் விலை ரூ.414 என்றும் தற்போது விலை ரூ.1118 என்றும் இதை தவிர வேறு எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.