Publish Date: Fri, 27 Jul 2018 (19:27 IST)
Updated Date: Fri, 27 Jul 2018 (19:55 IST)
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2 வருடங்களாக வயது முதிர்வு மற்றும் உடல் நிலை கோளாறு காரணமாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில்தான், அவரின் உடல் நிலையில் நேற்று இரவு நலிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
அவருக்கு காய்ச்சல் மற்றும் சீறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் மருத்துவமனை சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது.
ஆனால், நேற்று இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் அவரை சந்தித்தனர். மேலும், பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அண்ணா சமாதி தொடர்பான கோப்புகள் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள பகுதி ஆராயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல ராஜாஜி ஹால் பகுதியிலும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கவனத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளரனராம்.
இந்நிலையில் கருணாநிதி உடல்நலம் குறித்து விஷமியகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.