Publish Date: Mon, 17 Jul 2023 (15:02 IST)
Updated Date: Mon, 17 Jul 2023 (15:10 IST)
ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சட்டம் பயிலும் மாணவ - மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.சத்யதேவ் அவர்களின் பெயரில் Satyadev Law Academy- ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,
சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன்.
இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.
சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!
எனவே, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, #Jஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு. ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்! என்று பதிவிட்டிருந்தார்.
நடிகர் சூர்யா, தன் டுவிட்டர் பக்கத்தில்,
தங்களுடனான ஆக்கப்பூர்வமான உரையாடலும், வழிகாட்டலும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. மனப்பூர்வமான நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.