Publish Date: Wed, 16 Oct 2024 (11:10 IST)
Updated Date: Wed, 16 Oct 2024 (11:11 IST)
சென்னையில் இருந்து இன்று அதாவது அக்டோபர் 16ஆம் தேதி புறப்பட இருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை மற்றும் போதிய பயணிகள் இல்லாததே காரணம் என தெரிகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே, சென்னைக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், சென்னையிலும் அதன் சுற்றுவட்டார 9 மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கிடையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கிச் சென்றதன் காரணமாக, நேற்றிரவு முதல் சென்னையில் மழை படிப்படியாக குறைந்தது. இதனால், பெரும்பாலான சாலைகளில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேறி, போக்குவரத்து நிலைமை சீராகியது.
சென்னை நகர பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதேவேளை, மழையால் பாதிக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை குறைந்ததாலும், சென்னையில் இருந்து புறப்படவிருந்த சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரை, சேலம், ஷீரடி மற்றும் அதற்கும் எதிர்மாறான விமானங்கள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் புறப்படவில்லை.
இதன்படி, சென்னை-மதுரை (காலை 6:55), சென்னை-சேலம் (காலை 10:35), சென்னை-ஷீரடி (பிற்பகல் 2:40), மதுரை-சென்னை (காலை 10:00), ஷீரடி-சென்னை (பிற்பகல் 1:40), சேலம்-சென்னை (மாலை 6:00) ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தங்களது பயணத்திற்கான புதிய தகவல்களை அறிய, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.